Thursday, October 12, 2023

ஆப்ஷன் டிரேடிங் - உளவியல் பார்வை Part - 4

எந்த ஒரு தொழிலிலும் அது பற்றிய அடிப்படைப் புரிதல், அணுகுமுறை, தனது நிலை பற்றி அறிய வேண்டியது ஒவ்வொரு வர்த்தகரின் கடமை.

குறிப்பு: இது ஆப்ஷன் டிரேடிங்கை கற்றுக் கொண்டோ, கொஞ்சம் கற்றுக் கொண்டோ அல்லது கற்றுக் கொள்ளாமலோ ட்ரேடிங் செய்து தினமும் தொடர் நஷ்டம் அடைந்து கொண்டிருப்பவர்களுக்கான விழிப்புணர்வு பதிவு.

ஆப்ஷன் டிரேடிங்கை வெற்றிகரமாக செய்து வருபவர்கள், புரோக்கர்கள், ஆப்ஷன் டிரேடிங் கால்ஸ் கொடுத்து கமிஷன் பெற்று தொழில் செய்பவர்கள் மேற்கொண்டு படிக்க வேண்டாம். நன்றி!

வேலை / தொழில் வகைகள்

ஆப்ஷன் வர்த்தகத்தை தொழில் என கருதினால் பின்வரும் அடிப்படையை புரிந்து கொள்ளும் முன்பு ஒரு தொழில் என்பதன் அடிப்படையைப் எளிய உதாரணம் மூலம் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

தனி முதலாளியிடமோ, கார்பரேட்டின் கீழோ, அரசின் கீழோ தின, வார, மாத சம்பளத்திற்கு வேலை பார்ப்பது ஒரு வகை. (WORKER/ EMPLOYEE)

தன் திறமையை வைத்து (FREELANCER) ஆக தொழில் செய்வது இன்னொரு வகை.

தொழிலை வெற்றிகரமாக செய்ய கற்றுத் தருகிறோம், எங்களுக்கு கட்டணம் கொடுங்க; இது மூன்றாவது வகை. (சேவை?!)

தொழில் பற்றிய உளவியல் ரீதியான புரிதல்

வியாபார உலகின் மனநிலை, நிதர்சனம் பற்றிய புரிதல் அவசியம்.

நாட்டில் சட்டத்திற்கு உட்பட்ட பல தொழில்களின் ஒன்றுதான் இந்த ஆப்ஷன் டிரேடிங்கும்.

நமக்கும் டீ-க்கும் டீ குடிப்பதை தவிர வேறு எந்த சம்மந்தமும் இல்லை என்று வைத்துக் கொள்வோம். டீகடை வைப்பதாக முடிவெடுத்தால், கடைக்கான இடம் பார்ப்பது முதல், பொருட்களை வாங்குவது, இண்டீரியர் வடிவமைப்பது, மாஸ்டரை பணிக்கு அமர்த்துவது, என பல வேலைகளை இரவு பகல் பாராமல் செய்து கடை திறந்து கல்லாவில் உட்காரவே குறைந்தபட்சம் 3 மாதம் ஆவதாக வைத்துக் கொள்வோம்.

அந்த 3 லட்சம் முதலீடு போட்ட நாள் முதல், 3 மாத உழைப்பு, அலைச்சல், செலவுகள், பிரச்சனைகள், பஞ்சாயத்து, பேச்சுவார்த்தை, இன்ன பிற வாய்க்கால் தகராறுகள் எல்லாம் முடித்து, நான்காவது மாதம் கடை திறகும் முதல் நாள் முதல் டீ ஆர்டர் வரும் வரை 1 ரூபாய் வருமானம் வராது. இது தெரிந்துதான் கடை எவரும் ஆரம்பிக்கிறார். (90 DAYS = 0 Income)

(இங்கு ஆப்ஷன் டிரேடிங்கையும் ஒரு தொழிலாக நினைத்து செய்து, தொடர் நட்டமடைபவர்கள் தங்களை எப்படி தயார்படுத்திக் கொண்டார்கள் என தங்களை தாங்களே கேட்டுக் கொண்டு பரிசோதனை செய்து கொள்லாம்)

ஏரியாவைப் பொறுத்து 500 ரூபாய் முதல் 5000 ரூபாய் வரை குறைந்தபட்ச தினசரி வருமானம் உறுதி. அல்லது கடை பிரபலமாகும் வரை சராசரி தின வருமானம் 500 (ஆள்கூலி, பொருட்கள் செலவு போக) என்று கூட வைத்துக் கொள்வோம்.

WORST CASE SCENARIO

நாம் தொழிலை விருத்தி செய்வதற்கான வேலைகளை செய்யாதது, கடையை தொடர்ந்து திறக்காமல் இருப்பது, டீ, மற்றும் ஸ்நாக்ஸ் தரம் இல்லாமல் இருப்பது, சர்வீஸ் குறைவு, நிர்வாக திறன் இன்மை, பக்கத்திலேயே ஒரு பெரிய பிராண்ட் FILTER காபி கடை திறப்பு, மற்றும் பல காரணங்களால் கஸ்டமர்ஸ் / வருவாய் குறைந்து சில மாதங்களில் கடையை மூடி விட்டதாகவே வைத்துக்கொள்வோம்.. டீக்கடை தொழில் முயற்சியின் விளைவுகளைப் பார்ப்போம்.

Ø  எந்த ஒரு மோசமான நிலையிலும் 3 லட்சம் முதல் ஒரே நாளிலோ, ஓரே மாதத்திலோ பூஜ்ஜியம் ஆகாது.

Ø  கடையில் உள்ள பாய்லர், சிலிண்டர், தட்டுமுட்டு சாமான்கள் எல்லாம் விற்றால் பாதிக்கு பாதி விலையாவது அதாவது 1.5 லட்சம் திரும்ப வந்துவிடும் (கடை அட்வான்ஸ் உட்பட என்று வைத்துக் கொண்டால்கூட).

Ø புதிய ஒரு தொழிலை தொடங்கிப் பார்த்தோம் என்கிற திருப்தியும், உண்மையில் வியாபாரம் ஆகாத பட்சத்தில், அங்கு ஏன் டீ கடை வியாபாரத்தில் லாபம் வரவில்லை என்கிற லாஜிக்கலான கேள்விக்கு அனுபவபூர்வ பதில் கிடைக்கும்.

Ø  ஓராண்டு டீ கடை அனுபவம் எனக்கு இருக்குப்பா என்று மீண்டும் டீகடையையே வேறு இடத்தில் வைத்துப் பார்க்கலாம் என்று லாஜிக்கலாக முயற்சித்தால், வெற்றிக்கான படிக்கட்டுகளில் சரியாக போய்க் கொண்டிருக்கிறார் என அர்த்தம்.

Ø  அல்லது, எனக்கு வியாபார மனநிலையே இல்லை. ஒரு முறை நட்டமே போதும், இன்னும் என்னால் நட்டம் தாங்க முடியாதுப்பா, மாதம் ஆனால் சம்பளம் வாங்குவதுதான் பாதுகாப்பானது என முடிவெடுக்கும் பட்சத்தில், மாத வேலைக்கு செல்வதும் மிகச் சிறந்த முடிவு. இதனால் தொடர் நட்டம் தடுத்து நிறுத்தப்படுகிறது. கடன் வாங்கி கடை திறந்திருந்தால் கூட, 1.5 லட்சம் உடனடியாக அசலை கொடுத்துவிட்டு, மீதி 1.5 லட்சத்தை மாத தவணையாக ஒன்றரை வருடத்திற்குள் அடைத்து, நிம்மதியடையலாம்.

ஒட்டுமொத்த பார்வை

Ø  எனக்கு புடிச்சிருக்கு, எனக்கான வாழ்க்கைய நான் வாழறேன், நான் சுதந்திரமா தொழில் செய்றேன் என்று நினைத்து தொழில் ஆப்ஷன் டிரேடிங் செய்வது தவறில்லை. தொடர் நட்டமடையும் தொழிலை மேலும் மேலும் செய்வது ஒரு வித போதை (ADDICTION) மாதிரி. பணம், உற்றார் உறவினரோடு சேர்ந்து, மனநலம், மன நிம்மதியும் விட்டு விலகிச்செல்லும்.

நாம் சமுதாயத்திற்காக, கௌரவத்திற்காக வாழ்வதாக வைத்துக் கொண்டால், சமுதாயத்தைப் பொறுத்த வரை குடும்ப வாழ்க்கை, தொழில் வாழ்க்கை - இரண்டிலும் வெற்றி பெற்றவராக இருந்தால்தான் மதிப்பு.

Ø வாழ்க்கையில் வெற்றிகரமாக இருக்கிறோமா என்பதுதான் கேள்வியே தவிர எந்த துறையில் / தொழிலில் வெற்றிகரமாக இருக்கிம் என்பது பொதுவான கேள்வி அல்ல. ஆப்ஷன் டிரேடிங்கை நாமாகத்தான் தேர்ந்தெடுத்துக் கொண்டோம்.

Ø  தொழிலில் எவ்வளவு நட்டம் வரை தாங்க முடியும்? அல்லது எத்தனை காலம் போதிய வருமானம் இல்லாமல் அல்லது குறைந்த வருவாயோடு குடும்பத்தை சமாளிக்க இயலும் என்கிற தெளிவும் உறுதியும் அவசியம்.

Ø  தொடர் நட்டம் ஏற்படுத்தும் பொழுது, 1. அதை முறையாக செய்ய முயற்சிக்கலாம். அல்லது 2. நிறுத்தி விடலாம், இந்த இரண்டில் ஒன்றுதான் நம் மனநலத்தைக் காக்கும்.

Ø  பங்குச் சந்தை மட்டுமல்ல, எந்த தொழிலிலும் கண்மூடித் தனமாக நட்டமடையாமல் இருந்தாலே, என்றாவது தொழில் ஒரு நாள் மேம்படுவதற்கான சாத்தியக் கூறு அதிகம்.

Ø  நம்மை பற்றி நமக்குமே ஒரு நல்ல அபிப்பிராயம் ஏற்படும் என்பது உறுதி. நமக்கு நாமே உதவி செய்து கொண்டு வாழ்க்கையில் முன்னேறுவது மனித வாழ்க்கை. உற்றார் உறவினர்களைப் பாதுகாக்கும் எண்ணத்தோடு உழைத்தால் அது உன்னதமான மனித வாழ்க்கை.

தொடர்ந்து பகிர்வோம். வெற்றிகரமான முதலீட்டாளர்கள் ஆவோம்! நன்றிகள்!-

Wednesday, September 27, 2023

பங்கு சந்தை ஆப்ஷன் டிரேடிங் (STOCK MARKET - OPTION TRADING) - ஓர் உளவியல் பார்வை: பகுதி - 3

ஆப்ஷன் டிரேடிங்கை வெற்றிகரமாக தொடர்ந்து செய்துபவர்கள் குறித்து மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். இது அவர்களுக்கான பதிவு அல்ல. தொடர் நட்டமும் எப்போதாவது சிறு லாபமும் பார்க்கிற, மொத்தத்தில் நட்டம், கோபம், வேதனையில் இருப்பவர்களுக்கான அடிப்படையான, ஆழமான, உளவியல் ரீதியான பதிவே இது.

இங்க ஜெஸ்ஸி ஜெஸ்ஸின்னு சொல்லுதா?

டிரேடிங் என்பதன் அர்த்தம் வியாபாரம். இது ஒரு பொதுவான வார்த்தை.

உலகத்துல எத்தனையோ டிரேடிங் இருந்தும் நான் ஏன் ஸ்டாக் டிரேடிங்க்கு வந்தேன் தெரியுமா? என்று பங்குகளை வாங்கி, சில காலம் வைத்து விற்கும் வர்த்தகத்தில் இருப்பவர்கள் புத்திசாலிகள். (SWING, SHORT TERM, LONG TERM STOCK TRADING. NOT STOCK / INDEX OPTION).

எத்தனையோ ஸ்டாக்ஸ் இருந்தும் நான் ஏன் STRATEGICAL OPTION SELLING தொழிலுக்கு வந்தேன் தெரியுமா என்றால், இவர்களும் புத்திசாலிகள். (முதலீடு 15 முதல் 30+ லட்சம்)

டிரேடிங் அடிப்படைப் புரிதல்

மேற் சொன்ன இரு வகை வர்த்தகர்களுக்குமான லாஜிக்கைப் புரிந்து கொள்ள முயற்சிப்போம்.

நேரம் மிகவும் மதிப்பு வாய்ந்தது. ஒவ்வொரு மணித்துளியும் ஒன்று பணம் ஈட்ட வேண்டும்.

தனது படிப்பு அல்லது திறமையை வைத்து ஒரு கம்பெனியில் வேலை செய்யலாம். அல்லது முதல் கணிசமாக (அதிகம்) வைத்து வியாபாரம் (PREMIUM BUSINESS) தொழிலை செய்யலாம். லாபம் குறைவாக வந்தாலும் தொடர்ச்சியான வருவாய் (CONSISTENT INCOME) சாத்தியம். சிறு நட்டங்கள் பெரிதாக பாதிக்காது.

தொழில் செய்வோர் பின்னணி

எனக்கு ரியல் எஸ்டேட் தொழிலில் வருமானம், கட்டிடம், கடை, வ்வீட்டு வாடகை வருகிறது, முதலீடுகளிலிருந்து போனஸ், வங்கி சேமிப்பு, தங்கம் கையிருப்பு, அந்த வகையில் இன்னொரு பிசினஸ் OPTION SELLING. எல்லாவற்றிற்கும் அதனதன் முதலீட்டு தொகையைப் பொறுத்து மாதாமாதம் ஒரு நிலையான தொகை வருமானமாக வந்து கொண்டிருக்கும். அதே போன்றுதான் OPTION SELLING-லிருந்தும் வர வேண்டும் என்று நினைப்பது.

தினம் தினம், நொடிக்கு நொடி MTM பார்த்து, குடும்பத்தார், பொழுதுபோக்கு, நண்பர்களை விட்டு தள்ளி இருந்து, உலக பொருளாதார நிகழ்வுகளை கவனித்துக் கொண்டு, தூக்கம் தொலைத்து வர்த்தகம் செய்ய வேண்டிய அவசியமில்லை. அப்படி ஒரு வர்த்தகம் அல்ல, எந்த வேலை செய்தாலும் அது அர்த்தமற்றது. முட்டாள்தனம்.  

கணித்த திசைக்கு எதிராக மார்க்கெட் போனால் ADJUSTMENT STRAGEGY ஆர்டர் செய்துவிட்டு அமைதியாக இருப்பது. (மாத இறுதியில் அல்லது எதிர்பார்த்த சதவீத லாபம் வந்ததும் வெளியேறுவது.) பெரும் தொழில் அதிபர்களின் பாதையிலேயே பயணிக்கிறோம் என்கிற நம்பிக்கையே பலம்.

ஆப்ஷன் பையர்களின் மனநிலை

ஆபீஸில் MANAGER / TEAM LEAD PRESSURE, POLITICS, கைகட்டி பதில் சொல்ல புடிக்கவில்லை. கோபமாக அவர்களை கெட்ட வார்த்தையில் திட்டி, வேலையை விட்டுட்டு டிரேடிங் பண்ணி சுதந்திரமா இருந்துக்கலாம் என உணர்ச்சிவசப்பட்டு முடிவெடுப்பது. அல்லது கடன் வாங்கி டிரேடிங் பண்ணி கோடீஸ்வரனாக முடிவெடுப்பது.

LOGICAL & SUCCUESSFUL JOB SCENARIO

வேலைக்கு செல்லும் முன்பு, குறைந்தது (12 வருட பள்ளி படிப்பு + 3/4 வருட கல்லூரி படிப்பு) 15 வருட படிப்பிற்கு பின்பு, அது தொடர்புடைய ஒரு வேலையில் சேர்கிறோம். 5 வருடங்கள் பணி புரிந்த பின்புதான் மாதம் 1 லட்சம் சம்பளத்தை எட்டிப் பார்க்க முடிகிறது. அதுவும் பெரிய கம்பெனியாகவும், நாமும் பெரும் திறமைசாலியாகவும் இருந்தால் மட்டுமே.  

மாத சம்பளம் 20 ஆயிரமோ, 1 லட்சத்திற்கும் மேலோ, எந்த கம்பெனியில் எந்த நிலையில் வேலை செய்தாலும் (EMPLOYEE) நமது நேரம், உடலுழைப்பு, அறிவை முதலாளிகளுக்கு கொடுத்துதான் பொருளீட்ட முடியும். (LOGIC). 12 வருட உழைப்பு, படிப்பு, ஒழுக்கம், பயிற்சி, பொறுமையின் விளைவுதான் நமது மாத சம்பளம் மற்றும் LIFE STYLE.

இன்று நமது மனைவி, குழந்தைகள், குடும்ப பராமரிப்பு, வாகனம், உடை, ருசியான உணவு, சுற்றுலா, பொழுதுபோக்கு, பிற அனுபவங்கள் அனைத்தையும் கொடுத்திருப்பதும் நமது 12 வருட படிப்பு, பொறுமை, ஒழுக்கம்தான்.

ஒரு நிறுவனத்தில் வேலை செய்து, குடும்பத்தை பராமரிப்பது ஒரு சாதனை. வேலையை நேசிப்பதை விடுத்து, அதன் மேல் ஏன் வெறுப்பு?

சாத்தியமான வளர்ச்சிப் பாதைகள்

முதலில் நாம் செய்து கொண்டிருக்கும் தொழில் அல்லது வேலையில் நிச்சயமாக முன்னேறுவதற்கான சாத்தியக்கூறுகள் என்னென்ன என யோசிக்கலாம்.

நாம் செய்யும் வேலையிலேயே அடுத்த கட்டத்திற்கு செல்வதற்கான திறமைகளை வளர்த்துக் கொள்ளலாம். (HIGHER STUDIES, ADDITIONAL SKILL DEVELOPMENT, SHIFTING TO GOOD COMPANY ETC)

நாம் வேலையையே ஒரு தொழிலாக மாற்றி செய்வதற்கான வாய்ப்பு குறித்து யோசிக்கலாம். (DATA ENTRY OPERATOR TO DTP SHOP, HOTEL COOK JOB TO SMALL TIFFIN CENTER OR HOME MESS, NURSING JOB TO NURSING AGENCY ETC) உண்மையில் வளர்ச்சி பற்றி இப்படி நாம் ஆரோக்கியமாக யோசிக்கிறோமா?

நிலையான, அமைதியான, வசதியான வாழ்க்கையை வழங்கும் வேலையை உதறித்தள்ளி, FULL TIME TRADING-ல் வாழ்க்கையை முன்பு இருந்ததைவிட சிறப்பாக தொடர்ந்து நிர்வகிக்க முடிந்தால் சிறப்பு.

ஆனால் நிலைமை மோசமாக இருக்கும்போது, அடிப்படையான விஷயங்களை யோசிக்க வேண்டியது அவசியம்.

வேலையை சுரண்டல் என்று நினைப்பதும், சுதந்திர விரும்பியாக நினைப்பதும் அவரவர் தனிப்பட்ட கருத்துதான். உணர்ச்சிவசப்பட்டு தொழில் ஆரம்பிப்பதற்கும், பாதுகாப்பான திட்டமிடலோடு, அறிவோடு தொழில் தொடங்குவதற்கும் நிறைய வேறுபாடுகள் உண்டு.

பண்ணைத் தொழில், விவசாயம், ஆர்கானிக் பயிர் போன்றவை நல்ல தொழில்கள் தான். வங்கியில் கடன் வசதிகள் கூட எளிதில் பெற முடியும். தொழில் செய்து வருமானம் பார்க்க வேண்டும் என்கிற நியாயமான எண்ணமும், உழைப்பும் இருந்தாலே போதுமானது. (SUCCESS PROBABILITY அதிகம்), அவற்றில் தவிர்க்க இயலாத காரணங்களால் லாபம் இல்லை என்றாலும் கூட ஒரே இரவில் மொத்தமும் இழக்கும் வாய்ப்பு இல்லை. இதுதானே யதார்த்தமான அணுகுமுறை?

1 லட்ச ரூபாய் வேலையை விட்டு விவசாயம் செய்து, பண்ணை வைத்து மாதம் 10 வருமானம் பார்க்கும் ஐ.டி. ஊழியர். பத்திரிக்கை செய்தியோ, யூடியூப் தலைப்போ கடின உழைப்பாளிகள் மனதை சலனப்படுத்துவது இயல்புதான். உணச்சிவசப்படுகிறோமா, அல்லது உண்மையில் தொழிலதிபர் ஆக வேண்டிய நேரம் வந்துவிட்டதா என்பதை நிதானமாக ஆராய வேண்டும்.

முடிவாக ஒரு ஆரம்பம்

பணம் சம்பாதிக்க வேண்டும். வருமானத்தை அதிகப்படுத்த வேண்டும் என்னும் ஒவ்வொருவரின் பொதுவான நினைப்பும் ஆசையும் நியாயமானதே. ஆனால் தொடர் நஷ்டம் வரும்போதும், தொடர்ந்தை அதையே ஏன் மீண்டும் மீண்டும் கண்மூடித்தனமாக செய்ய வேண்டும்?

தொடர் நஷ்டமடையும் தொழிலை தொடர்ந்து செய்வது யதார்த்தத்தமான தொழிலுக்கும் ஆரோக்கியமான மனநிலைக்கும் முரண்பட்டது. போதைப் பழக்கம், மன நல பாதிப்பு. நம்மோடு சேர்ந்து நம் உற்றாரையும் பாதிக்கும் என்பதை உணர்வோம்.

தாய் தகப்பன்களைப் போல ஒரு சிலரே நாம் நிம்மதியாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். அவர்களின் உணர்வுகளிக்கும் மதிப்பளித்து, லாப சாத்தியக் கூறு அதிகமுள்ள பல தொழில்களை அறிவுக்கண் கொண்டு செய்து பொருளீட்டுவோம்.

முடிவாக பணம் சம்பாதிப்பதுதான் முக்கியமே தவிர, ஆப்ஷனில்தான் பணம் சம்பாதிக்க வேண்டும் என்று தலைகீழாக மொட்டை மாடியிலிருந்து குதிப்பதை நிறுத்துவோம்.

கட்டுரை நீளம் கருதி முடிக்கிறேன். தொடர்ந்து பகிர்வோம்! தொழிலை லாபமாக செய்வோம். அல்லது யதார்த்தத்தில் லாபகரமான தொழிலை நோக்கி நகர்வோம். மேம்படுவோம்! நன்றிகள்.

Saturday, September 2, 2023

பங்கு சந்தை ஆப்ஷன் டிரேடிங் (STOCK MARKET - OPTION TRADING) - ஓர் உளவியல் பார்வை: பகுதி - 2

ஆப்ஷன் டிரேடிங்கை உண்மையில் வெற்றிகரமாக தொடர்ந்து செய்து வருபவர்கள் குறித்து மிகுந்த மகிழ்ச்சி. வாழ்த்துக்கள். இது அவர்களுக்கான பதிவு அல்ல. இது ஒரு பரந்த, பொதுவான, சக்திவாய்ந்த, அகன்ற, ஆழமான, உளவியல் ரீதியான, சுவாரஸ்யமான பதிவு. 

ஆப்ஷன் டிரேடில் தொடர் நஷ்டமடைபவர்களின் மனநிலையை மெல்ல வெற்றிகரமான ஆப்ஷன் டிரேடர்களாக அல்லது நீண்டகால முதலீட்டாளராவது நோக்கி திருப்பும் ஒரு பெரும் முயற்சியின் சிறு துளிதான் இப்பதிவு.

ஆப்ஷன் பையிங் (LOW PREMIUM OPTIONS) அலப்பறைகள்:

காட்சி 1:

நிஃப்டியில் SWING TRADE-இல் POSITIONAL-ஆக ஒரு மாதம் 700 முதல் 1000 பாயிண்ட்ஸ் நிஃப்டியில் அசால்டாக பிடிக்கலாம் இந்த OPTION BUYING STRATEGY மூலம் என்று சொல்வார்கள். முடிந்து போன சார்ட்டை காட்டி, INDICATORS போட்டு, இங்க வாங்கி, இங்க வித்திருந்தா ஆழ்வார்பேட்டையில வீடு வாங்கி இருக்கலாம் என்று சொல்லாத குறையாக அவர்களின் புதிய கண்டுபிடிப்பு ஸ்ட்ராட்டஜியை விவரிப்பார்கள். 

(இடையிடையே தயவு செஞ்சு சப்ஸ்கிரைப், தயவு செஞ்சு வீடியோ ஸ்கிப் பண்ணாம பாருங்க என பல முறை கெஞ்சுவார்கள். அவர்கள் விற்கும் பொருட்களையும் வாங்க சொல்வார்கள்)

STOP LOSS வெறும் 250 முதல் 300 POINTS தான் என்பார்கள். (அது 12500 முதல் 15000 ரூபாய்). அவர்களின் வெறும் SL நம்மவர்களின் ஒரு மாத வீட்டு வாடகையாக இருக்கலாம்.

ஒரு நில நாட்களில் மார்க்கெட் எதிர் திசையில் சென்று MTM சில ஆயிரங்களை கபளீகரம் செய்து ரத்தம் கக்கிக் கொண்டிருக்கும்போது, மனம் தாங்காமல் ஓடிச் சென்று FB, WHATSAPP, INSTA குரூப்பில் கருத்து கேட்போம். அங்கிருந்து நக்கலான கமெண்ட்கள் வந்து விழும்.

EXPIRY DAY அன்று மார்கெட் நாம் முன்கணித்த எண்ணுக்கோ அதைவிட அதிகமாகவோ சென்றிருந்தாலும் கூட நமது பிரீமியம் (0 ஆகாமல்) 40 பைசா ஆகும். தைரியம் இருந்தால் SL ஹிட் ஆகும் வரை காத்திருப்போம். அல்லது வலி தாங்க முடியாமல் நாமே வெளியேறி விடுவோம். (பிறகு வழக்கம் போல மார்கெட் TARGET நோக்கி புயல் வேகத்தில் செல்லும். இது ஒரு தொடர்கதை)  

காட்சி 2:

இந்த ONE MINUTE SCALPING STRATEGY உங்க வாழ்க்கையை மாற்றும் என்பார்கள். ஆம், நாம் தினமும் 30-50 டிரேட் செய்தால், அது நிச்சயம் புரோக்கர்களின் வாழ்க்கையை மாற்றும்.

SCALPER-ன் மனநிலையில் SCALP TRADING ஏற்படுத்தும் மன நல பாதிப்பு அதிகம். POSITIONAL-ல் நிறைய இழந்து, INTRA DAY TRADING வில் இறங்கி, டார்கெட் அல்லது SL வரை காத்திருக்கும் மன திடம் இன்றி, பயம் மற்றும் பதற்றத்தில் MTM பச்சையாக இருக்கும்போதே உடன் வெளியேறி ஜாக்பாட்டை பல நாட்கள் மிஸ் செய்து, SL போடாமல் அக்கவுண்ட் பேலன்ஸை ஒரே நாளில் இழந்து, பின் அவர் SCALPING-ற்கு வந்து இருக்கலாம்.

SCALPING என்பது அதிக லாட்களில் 1-5 புள்ளி லாபத்தையோ, 10 புள்ளி நட்டத்தையோ, அதிவேகத்தில், அதிகமுறை புக் செய்யும் வியாபாரம் என்பதை நினைவூட்ட விரும்புகிறேன் மக்களே.

SCALPING-ற்கு உண்டான உண்மையான மனநிலையோடுதான் நாம் டிரேட் செய்கிறோமா என்பதை நமக்கு நாமே கேட்டுக் கொள்ள வேண்டும்.

காட்சி 3:

அடுத்து HERO OR ZERO TRADE-ல் ஒரு கை பார்க்கலாம் என்று இறங்குவோம்.  கம்மி விலையில் வாங்கி கொள்ளை லாபம். (அல்லது பூஜ்ஜியம்). SL போட்டு வெளியேற கூடாது. இது விளையாட்டின் விதியாம். மாதத்தின் 4 EXPIRYயில் ஒரு EXPIRY-யில் ஹீரோ ஆனால் கூட மொத்த நட்டத்தையும் சரி செய்துவிடலாம் என்பார்கள். அப்படி பார்த்தால் கூட ஒரு INDEX-ஐ மட்டும் பின்பற்றி EXPIRY TRADE பண்ணுவோமா நாம்? மாட்டோம்.

சராசரியாக மாதம் BANK NIFY-க்கு 4 EXPIRY, NIFTY-க்கு 4 EXPIRY, FIN NIFTY-க்கு 4 EXPIRY, SENSEX 4 EXPIRY... போதும் போதும்... தினம் தோறும் எக்ஸ்பயரிதான்... (சிரங்கு வந்த கை சும்மாவா இருக்கும்னு ஊர்ல பழமொழி சொல்வாங்க?)

ஆப்ஷன் பையர்களின் புரிதல் நிலை:

என்னாடா இது! இண்ட்ராடே பண்ணாலும் பணம் போவுது. சாந்தி சாந்தி என தியானம் எல்லாம் கற்றுக் கொண்டு செய்து POSITIONAL OPTION TRADE பண்ணினாலும் பணம் போகுது, இது SIDEWAYS MARKET போல இருக்கு என்று SCALPING-ம் பண்ணி பார்த்தாச்சு. என்ன மாதிரி டிசைன்டா இது? என நொந்து கொள்வோம்.

மார்கெட்டை ஒரு கை பார்க்காம விடுவோமா? நாம யாரு..!? நம்மகிட்டயேவா!

தெரிந்தவர், அல்லது யுடியூப் அனலிஸ்ட் புலிகளிடம் கேட்போம். ஆப்ஷன் பையிங்கில் TIME DECAY... இது THETA பண்ற வேலை. காமா தெரியுமா? என்று அசால்டாக கேட்பார்.

அது தெரியாததால் தான் இவ்வளவு நாள் பணத்தை இழந்தோம் என ஷேமாக உணர்ந்த நாம்.

அப்புறம் என்ன? ஓ, நமக்கு இன்னும் அந்த டிரிக் கைவரவில்லை போல இருக்கு. நாம ஏன் ஒரு அனலிஸ்ட் புலியிடம் ஆப்ஷன் பையிங் ஸ்ட்ராட்டஜி கற்றுக் கொள்ள கூடாது? என்று மீண்டும் ஒரு குருநாதரை தேடி ஓடி பணம் கட்டி, ஸ்ட்ராட்டஜி கற்றுக் கொள்வோம்.

எங்க குரூப்பில் சேருங்க, லிங்க் கிளிக் பண்ணி டீமேட் அக்கவுண்ட் ஓப்பன் பண்ணுங்க, 10, 20, 30 ஆயிரம் கட்டி கோர்ஸ் வாங்க சொல்வார்கள். மீண்டும் அன்னிக்கு சூரியன் உதிச்சுதா. கோழி கொக்கரக்கோன்னு கூவிச்சா...!

மீண்டும் டிரேடிங்கில் குதிப்போம். ஆனால் ரிசல்ட் அதேதான்.

காரணம் கேட்டால், நம்மளை ஒழுக்கமாக டிரேட் செய்யவில்லை. சைக்காலஜி சரியில்லை என்பார். பைத்தியம் என்று நேரடியாக சொல்லாத குறையாக சொல்வார். ஏற்கெனவே நஷ்டமான நாம், மீண்டும் பணம் கட்டி கோர்ஸ் படித்து, பணம் கட்டி டிப்ஸ் வாங்கி, பணம் வைத்து டிரேட் பண்ணி, மீண்டும் நஷ்டமாகி மனம் நொந்த நிலையில், நானா உன்ன கையை பிடிச்சு இழுத்தேன்..? என்று நம்மையே திட்டுவார்கள். (வேறு ஒரு குருவை அல்லது புதிய ஸ்ட்ராட்டஜியை தேடியும் மனம் ஓட நினைக்கும்)

இதெல்லாம் புத்திசாலித்தனமான, லாஜிக்கலான, யதார்த்தத்திற்கு ஒத்து வரும் வியாபாரமா? இப்படி எல்லாம் வழிகாட்டுறேன் பேர்வழி என அனலிஸ்ட் புலிகள் செய்வது சரியா? இதை நாம்தான் நமது டிரேடிங் முடிவிலிருந்து நடுநிலையோடு யோசிக்க வேண்டும்.

உளவியல் அணுகுமுறை:

ஆசைகாட்டி ஏமாற்றுபவர்களை நாம் ஒன்றும் பண்ண முடியாது. ஆனால் அவர்கள் விரிக்கும் வலையில் சபலப்பட்டு விழாமல் நம்மை நாம் கட்டுப் படுத்திக் கொள்ளlலாம். அது நம் கையில். 

எப்படியாவது இழந்த பணத்தை மீட்க வேண்டும் என்று எமோஷனலாகி, மீண்டும் ஆரம்பித்த இடத்திற்கே அல்ல, அதைவிட பெரும் பள்ளத்தில் விழுவோம். இழந்த பணத்தை எடுக்க நினைப்பது தவறல்ல. சரியானதுதான். அப்படி நினைக்கவில்லை என்றால்தான் மனக்கோளாறு. 

இழந்த பணத்தை மீட்க வேண்டும் என்பது தான் முக்கியமே தவிர, பலமுறை நட்டத்தை சந்தித்த அதே வழியில்தான் அதை மீட்க வேண்டும் என்பதில் லாஜிக் இல்லை. 

ஆனால், CHEAP OPTION BUYING-ல் விட்ட பணத்தை, அதே CHEAP OPTION BUYING இல் பிடித்து, கோடீஸ்வரனாக நினைப்பதுதான் நடைமுறைக்கு ஒவ்வாதது.

அப்படி ஆக முடிந்தால், பிறகு ஏன் கம்மிவிலை ஆப்ஷன் பையிங் ஸ்ட்ராட்டஜியை, சாஃப்ட்வேரை நம்மிடம் அதிக விலைக்கு கூவி விற்கிறார்கள்? அவர்கள் டெக்னிக்கை அவர்களே பயன்படுத்தி அமைதியாக கோடிகளை அள்ளலாமே! மக்களை கோடீஸ்வரனாக்கும் சேவையை இலவசமாக செய்யலாமே என்றால், நான் உன் கையை பிடித்து இழுக்கவில்லை. செபியில் பதிவு செய்யவில்லை. இது என் தொழில், DISCLAIMER பாருன்னு... பம்மிடுவாங்கோ! 

இன்று வரை பல வெற்றியாளர்கள், பிரபலங்கள், கோடீஸ்வரர்கள், சூப்பர் ஸ்டார்கள் சமுதாயத்திற்கு ஆற்றி வரும் ”சேவையை” நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.  

CHEAP OPTION BUYING, விட்டதை பிடிக்கிறேன் பாரு என்கிற மனநிலை நமது பலவீனம் என்பதை உணர்வோம். இல்லை என்றால், அது அனலிஸ்ட் புலிகளுக்கு பலமாகி பணமாகிவிடுவதை தவிர்க்க முடியாது.

சிறிய, வலிமையான ட்ரிக்ஸ்:

RETAIL INTRADAY, POSITIONAL CHEAP RATE OPTION BUYER களின் EMOTIONAL WEAKNESS.-ஐ கொத்தாகப் பயன்படுத்தி BIG SHOTS விளையாடும் விளையாட்டு என்கிற எதார்த்ததை, உணரும் நாள் முதல் நமது நட்டம் நிறுத்தப்படும். அதுவே முதல் லாபம்.  

ஏற்கெனவே கடன், மாதாந்தர EMI, கமிட்மெண்ட், வட்டி செலவுகள் என ஓடிக் கொண்டு இருப்பவர்கள் நிறுத்தி யோசித்து அதையே தொடராமல் இருக்க வேண்டிய நேரம் இது. ஏனெனில் கோவிட்டுக்கு பிந்தைய உலக நாடுகளின் பொருளாதார நிலையின் அளவுகோள் (GLOBAL ECONOMICS) சொல்லும் வலுவான முடிவுகள் அப்படி.

CHEAP OPTION BUYING செய்யாத ஒவ்வொரு நாளும் நாம் தினசரி 10,000 ரூபாய் ஜாக்பாட் அடித்ததற்கு சமம் என்ற உண்மையை மீண்டும் மீண்டும் நமக்குள் உறுதியாக சொல்லிக் கொள்வோம்.

ஆப்ஷன் பையிங் அடிமைத்தனத்திலிருந்து விடுபட, STOCK-ல் SWING TRADE, SHORT TERM என அளவாக செய்யலாம். உணர்ச்சிவசத்தை கட்டுப்படுத்தலாம்.

அக்கவுண்ட்டில், டீமேட் கணக்கில் உபரியாக ஆப்ஷனில் ஆடி விட வைத்திருக்கும் பணத்தை மொபைல் பேங்கிங் இல்லாத ஒரு அக்கவுண்ட் இல் வங்கிக்கு சென்று பணத்தை போட்டுவிட்டு வரலாம்.

அல்லது அந்த பணத்தில் உடனே மனைவிக்கோ, அம்மா, அப்பாவுக்கோ ஏதோ ஒரு தங்க நகையை சர்ப்ரைஸாக வாங்கி தரலாம். குழந்தைக்கு BRANDED DRESS, SHOE ஒன்று சர்ப்ரைஸ் கிஃப்ட் செய்யலாம். உறவுகளுக்காக செய்த செலவு என்றுமே அபரிமிதமான லாபம் தான். (உறவும் பலப்படும். தங்கமும் அவசரத்துக்கு உதவும். ஒரே கல்லில்...)

குறிப்பு: இது ஆப்ஷன் டிரேடிங்கிற்கு எதிரான பதிவல்ல. அல்ல. உபரி பணத்தை ஆப்ஷனில்தான் விட்டுப் பார்க்கிறேன் பாதிப்பில்லை என்றால், ENJOY. கம்மிவிலை ஆப்ஷன் பையிங் தினசரி வர்த்தகத்தை லாபகரமாக செய்து வரும் அனைத்து டிரேடர் பெருமக்களுக்கும் வாழ்த்துக்கள்! "அறிவின் விரிவே நமது நிரந்தர செல்வம்!" 

கட்டுரை நீளம் கருதி இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். தொடர்ந்து பகிர்வோம், உங்கள் ஆதரவோடு! பயமின்றி, நிம்மதியாக, அறிவார்ந்த முறையில் பொருளாதார வளம் பெறுவோம்! நன்றிகள்! N. வெங்கடேசன்

Tuesday, August 1, 2023

பங்கு சந்தை வர்த்தகம் (STOCK MARKET - TRADING) - ஓர் உளவியல் பார்வை (பகுதி-1)

(இந்த ஒரு STRATEGY போதும், இனி நீங்க கோடீஸ்வரர்தான்)

பங்குசந்தை:

பங்குசந்தை என்றாலே பொதுவாக ”ஒன்னு வச்சா, ரெண்டு, ரெண்டு வச்சா நாலு, நாலு வச்சா எட்டு” (QUICK MONEY EARNING, BECOME RICH QUICKLY) என்ற மனோபாவத்துடன் பார்ப்பவர்களும், புரிந்துகொள்பவர்களும், அணுகுபவர்களும், உள்நுழைந்து பணமிழந்து வேதனைப்படுபவர்களுமே அதிகம். பங்கு வர்த்தகம் பற்றிய சரியான புரிதல் இன்மை காரணம் என்பது எந்த அளவிற்கு உண்மையோ, அதை விட தன்னைப் பற்றிய புரிதல் இன்மை (SELF AWARE) என்பதே மிக மிக முக்கியமான கருத்து.

சில ஆயிரம் முதல், பல லட்சங்கள் வரை பணத்தை ஆப்ஷன் டிரேடிங்கில் (CHEAP, NACKED OPTION BUYING / TRADING) இழந்த பின்பும், இன்னும் ஒரு டிரேடில் எனது மொத்த நஷ்டத்தையும் ஈடுகட்டி, அதைவிட அதிக லாபம் பார்த்துவிடுவேன் என்கிற அதி தீவிரமான, சாத்தியமில்லாத, நடைமுறையை ஏற்றுக்கொள்ள இயலாத மனநிலையில் பல்லாயிரம் பேர் செயல்படுவதை ஒருவித மனநோய் (MENTAL PROBLEM) என்றே கூறலாம். தன்னை மாற்றிக்கொண்டு நிம்மதியான வாழ்க்கை வாழ வேண்டும் என்கிற எண்ணம் ஆழ்மனதில் இருந்தால், நிச்சயம் உதவிகள் கிடைக்கும். மாற முடியும்.

ஆனால், ”இந்த ஒரு டிரேட் என் வாழ்க்கையையே மாற்றிடும்” என்கிற எண்ணமே 99.99% டிரேடர்களின் மனங்களை உடைத்து மீளாத் துயர் வலையில் சிக்க வைக்கிறது. என்ன செய்யலாம்?

1. நோக்கத்தில் தெளிவு (CLEAR AIM)

”நமது அளவுகோள்படி, நாம் பணக்காரர் ஆகவேண்டும்” என்பதுதான் ஒவ்வொருவரின் ஆசை, கனவு, லட்சியம்,  வெறி. இதுவே அடிப்படை உண்மை. ஆனால், இந்த வழியில்தான் பணக்காரர் ஆக வேண்டும் என்கிற குறுகிய மனப்பான்மையில், எந்த வித புரிதலும் இன்றி, உணர்ச்சிவசப்பட்டு (EMOTIONAL) தனக்கு பொருத்தமில்லாத ஒரு துறையிலேயே மீண்டும் மீண்டும் ஈடுபட்டு, உடல், மன ஆரோக்கியம், சக்தி, உறவுகள், நட்புகள், செல்வம் மற்றும் மிக முக்கியமாக நேரத்தை இழப்பது வீண். ”தனக்கு எது ஒத்துவராது” என்பதை அறிந்து, அதில் ஈடுபடாதவர் நிச்சயம் லட்சியத்தை எட்ட முடியும்.

2. தொழில்கள் ஆயிரம் (LOTS OF BUSINESSES)

சினிமா, ரேஸ், ரம்மி, மலிவு விலை OPTION BUYING இன்னும் பல அடிப்படை விதிகளுக்கே பொருந்தாத, வெற்றி வாய்ப்பு மிகவும் குறைவாக உள்ள தொழில்களில் ஈடுபடுவதன் மூலமாகத்தான் கோடீஸ்வரர் ஆக வேண்டும் என்று நினைப்பது அறியாமை. தலைகீழாகத்தான் குதிப்பேன் என்றால் மேற்சொன்ன துறைகளில் வெற்றி பெறும் 10% பேர்களின் ஃபார்முலாவை CRACK செய்து, அவர்களின் உலகமகா பொறுமையோடு உங்களால், உணர்வுகளை கட்டுப்படுத்தி செயல்பட முடிந்தால் சபாஷ். முடியாது என்றால் RISK AND TENSION குறைவான, SIP, BONDS, GOLD, SHORT TERM, LONG TERM, INVESTMENT உடன் நிறுத்திக்கொள்வது புத்திசாலித்தனம். மனதை தனக்கு தெரிந்த, வெற்றி வாய்ப்பு அதிகமுள்ள தொழிலை நோக்கி மாற்றிக் கொள்வது அதி புத்திசாலித்தனம்.

உலகில் பல வேலைகள் மற்றும் தொழில்கள் உள்ளன. வங்கியில் வேலை செய்பவர்களும், தனியார், அரசு நிறுவனங்களில் வேலை செய்பவர்களும், பெட்டிக் கடை முதல் பல வகைப்பட்ட சிறு, குறு, நடுத்தர வியாபாரம் செய்பவர்களும் இன்ன பிற சேவைகள் செய்பவர்களும் செல்வந்தர்கள் ஆன வரலாறு மிக மிக அதிகம். ஒரு தொழில் நொடித்து போனாலும், சுதாரித்து அதன் காரணங்களைக் கண்டறிந்து, சில காலத்திற்கு பின் மீண்டும் CALCULATED RISK மூலம் அதே தொழிலை சிறிது வடிவம் மாற்றி செய்து, பெரும் வெற்றி பெற்றவர்களும் ஏராளம். அக்கம் பக்கம் கேட்டாலே, பல உதாரணங்கள் கிடைக்கும்.

OPTION BUYER-களின் குறுகிய பார்வையால் ”பல பொன்னான தொழில்களும், வேலைகளும் தூங்குதப்பா”

3. வேறுபட்ட பார்வை: (DIFFERENT PERSPECTIVE)

ஒரு டாக்டர் காலை 3 மணி நேரம், மாலை 3 மணி நேரம் வேலை பார்க்கிறார். 5 நிமிட கன்சல்டிங்கிற்கு 500 ரூபாய் வசூலிக்கிறார். காலை மாலை சராசரியாக 10+10=20 நோயாளிகளைப் பார்த்தால், ஒரு நாளைக்கு 10 ஆயிரம் ரூபாய் வருமானம். (6 மணி நேர உழைப்பு). மாதம் 3 லட்சம். வருடம் 36 லட்சம். டாக்டருக்கு படிக்க 1 கோடி செலவு செய்திருந்தால், தோராயமாக 4 வருடங்களில் போட்ட முதலை எடுக்கிறார். ஐந்தாம் வருடத்திலிருந்தே லாபம் பார்க்க ஆரம்பிக்கிறார். (இங்கு நான் சொல்வது எந்த அப்டேட்டும் செய்து கொள்ளாத, சராசரிக்கும் கீழான மருத்துவரையும், அவரது சராசரி & குறைந்தபட்ச வருவாயையுமே)

5 வருடத்தில் இந்த நிலையை அடைய, அவர் மட்டுமல்ல, அவர் குடும்பத்தாரே அவருக்கு ஒத்துழைப்பு செய்து, அவரை 5 ஆண்டுகள் மருத்துவம் படிக்க வைத்து, அவரை சப்போர்ட் செய்திருக்கிறார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை.

TRADING IS A PROFESSION  என்று சொல்பவர்களில் பெரும்பாண்மை புரோக்கர்களாகவோ, அல்லது அட்வைஸர்களாகவோ அல்லது ஏதேனும் ஒரு வியாபார உள் நோக்கம் கொண்டவர்களாகவோதான் இருப்பார்கள். நமது நலனில் அக்கறை கொண்டவர்கள் நம் குடும்பத்தாரும், நாமும்தான். இங்கு ஒருவருடைய வாழ்க்கை போன்று வேறு எவருடைய வாழ்க்கையும் இருக்காது.

ஆனால் வாழ்க்கை ஒன்றே ஒன்றுதான். ஒரே முறைதான். இப்படிப்பட்ட மன உளைச்சல்களுக்கு மத்தியில் எப்போதாவது பார்க்கும் லாபமும் எப்பவுமே கிடைக்கும் நஷ்டமும் தேவையா என்பதை புரிந்து செயல்பட வேண்டியதும், செயல்படாமல் தவிர்ப்பதும் அவசியம்.

பணம் செலவழித்து, பல டெக்னிக்கல் கோர்ஸ்களை கற்றபின்பும், அடுத்து நாம தெரிஞ்சுக்க போற STRATEGY தான் நம்மை கோடீஸ்வரனாக்கும் என்று நம்பும் அப்பாவி டிரேடர்களும், அடுத்து நாம டிசைன் பண்ணி விற்க போகிற STRATEGY-தான் நம்மை கோடீஸ்வரனாக்கும் என்கிற அனலிஸ்டுகள் மற்றும் புரோக்கர்களும் மாறி மாறி அடித்துக் கொள்ளும் தளம் கீழ் நிலையில்தான். 

மக்களிடம் புரிதல் ஏற்பட்டுவிட்டால், இங்கு எவரும் எவரிடமும் பணம் இழக்க வேண்டிய, மனம் வேதனைப்பட வேண்டிய அவசியமில்லை என்னும் புரிதல் நோக்கிய கட்டுரைகள் தொடருவோம். தங்கள் ஆதரவிருந்தால். உடல், மன, ஆரோக்கியம் வேண்டி, தொடர்ந்து பகிர்வோம். நன்றிகள் 

Monday, March 28, 2022

ஒரு நிஜ கோடீஸ்வரனின் வாழ்க்கை_Lifestyle matters

எப்படியாவது கஷ்டப்பட்டு, சீக்கிரமா வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட வேண்டும் எனறு நினைக்கும் ஒவ்வொருவருக்கும்

செல்வந்தர் ஆவது

எந்தவித பின்புலமும் (Back ground) ஆதரவும் (Support) விழிப்புணர்வும் (Awareness) இன்றி, வெறும் உழைப்பை அல்லது அறிவை மட்டுமே மூலதனமாக வைத்து பணக்காரர் (Rich) ஆகிவிட முடியும் என்று நம்மில் பலரும் நம்பி போராடிக் கொண்டிருக்கிறோம்.

வாழ்க்கையில் என்றோ கிடைக்கப்போகிற அல்லது கிடைக்காமலே போய்விடும் சாத்தியம் அதிகமுள்ள, அந்த பொருளாதார சுதந்திரம் (Financial Independence) அல்லது நிம்மதி என்கிற ஒரு (செயற்கை / போலி) லட்சியத்தால் தூண்டப்பட்டு தொடர்ந்து உழைக்கிறோம்,

சேமிப்பு (Savings) இல்லை, ஓய்வை (Rest) நினைத்துகூட பார்க்க முடியாது. குறுக்கு வழி, அல்லது சுலபமாக எப்படி செட்டில் ஆகலாம் என்று சில நேரம் யோசனை. பணக்காரர்கள் பரம்பரை பணக்காரர்கள்தான் போல என்றோ, தவறான வழியில் பணம் சம்பாதித்தவர்களாகத்தான் இருக்கும் என்றோகூட நினைப்பு

வியாபார தந்திரமும் மிடில் கிளாஸ் பரிதாபமும்:

பெரும்பாலான Middle Class மக்களின் இந்த நினைப்புதான், பல மீடியாக்கள், தொழில்கள் மற்றும் உளவியல் நிபுணர்களின் உலகலாவிய வியாபாரத்திற்கான மூலதனம்.

கடுமையாக உழைத்தால் போதாது, புத்திசாலித்தனமாக உழைக்க வேண்டும் (SMART WORK), உழைக்காமலே பல வழிகளில் வருமானம் (Passive income),  ஒரு முறை வேலை, வாழ்நாள் வருமானம், நீங்கள் தூங்கும்போதும் உங்களுக்கு வருமானம் வந்து கொண்டிருக்கும், நீங்கள் விரும்பும் சொகுசு கார், சொந்த வீடு, வெளிநாட்டு சுற்றுலா, பொருளாதார சுதந்திரம், நினைத்ததை ஈர்க்க என (தேவை இருக்கோ இல்லையோ) ஆசைகளைத் தூண்டி சபலத்தில் தள்ளி, அவர்களின் பொருளையோ அல்லது சேவையையோ EMI-யிலாவது வாங்க வைப்பார்கள்.

ஏழையாக இறந்தால் அது உன் தவறுதான் என்பது போன்ற, மோட்டிவேஷன், POSITIVE THINKING என்ற போர்வையில், திரும்ப திரும்ப உணர்ச்சியாக பலமுறை சொல்லி மூளைச்சலவை செய்கிறார்கள். கடுமையாக உழைத்தால் உயரலாம் என்று நம்பி (?) ஏற்கெனவே எந்திரம் போல உழைத்துக் கொண்டிருக்கும் மக்கள் மிகச்சுலபமாக  அவர்கள் வலையில் விழுகிறார்கள்

எத்தனை நாள்தான் ஒரே வேலையில் மாத சம்பளத்தில், Increment, bonus- நம்பியே ஓடிக் கொண்டிருப்பது என்று வியாபாரிகள் விரித்த வலையில் நடுத்தர மக்கள் மிகச்சரியாக, வசமாக மாட்டிக் கொள்வார்கள்.

குறைந்த வட்டி, தவணை கடன் திட்டம், உடனடி கடன், ஆன்லைன் கடன், தவணை முறையில் பொருள் வாங்குவது, தள்ளுபடி விலை, Special offers... அனைத்தின் நோக்கமும் இதுதான்.  

கவுண்டமணி பாணி

இலவசமாக பினாயில் குடுத்தாலும் இவர்கள் வாங்கி குடிப்பார்கள் என்று கவுண்டமணி காமெடியில் சொல்லும் பரிதாப நிலைதான் தொழில்நுட்ப வளர்ச்சி அடைந்த இன்றும் தொடர்கிறது, பல நவீன வடிவங்களில். கழுத்தை நெறிக்கும் கடன் மற்றும் தேவையற்ற மாதாந்தர கமிட்மெண்ட்களுக்கு இதுவே அடிப்படை காரணம்.

பார்வையில் தெளிவு

இந்த சமுதாய அமைப்பில் எல்லாரும் கோடீஸ்வரன் ஆக முடியாது. பாசிடிவ் திங்கிங் என்று யார் சொல்வதையாவது கேட்டாவது உணர்ச்சிவசத்தால் தூண்டப்பட்டு செயல்பட்டால் கோடீஸ்வரன் ஆவது நிச்சயம். ஆனால் நாம் அல்ல, கம்பெனிகாரர்கள்

இங்கு கார்பரேட்டுகளுக்கு உழைத்து கொடுத்து, அவர்களை கோடீஸ்வரனாக்குவதே உழைக்கும் மக்களின் சாபக்கேடு என்கிற அருவி திரைப்படத்தின் வசனம் கச்சிதமாக பொருந்துகிறது.

ஐடியாக்கள்

தேவை இல்லாத பொருட்களை வாங்கவே கூடாது (இலவசம், குறைந்த விலை என்றாலும்). தேவையில்லாததை வாங்கினால், தேவையானதை விற்க நேரிடும் என்பதை ஆழ்மனதில் பதிவு செய்துகொள்ள வேண்டும்தேவையான எதையுமேகூட பொறுத்திருந்து, நம் சொந்த சேமிப்பில் இருந்து மட்டும்தான் வாங்க வேண்டும்.

தேவை இல்லாத செய்திகளையோ, வீடியோக்களையோ பார்க்கவே கூடாது

எல்லோரும் எல்லா விஷயங்களையும் தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற அவசியம் இல்லை.

யாரைப் போலவும் நாம் மாற வேண்டிய அவசியம் இல்லை. ஒவ்வொருவர் வாழ்க்கையும் தனித்துவமானது, சிறப்பானது.  

கார் வைத்துக்கொள்ளும் வசதி வரும்போது பைக் வாங்கணும். பைக் வாங்கும் வசதி வந்தால் சைக்கிள் வாங்கணும். சைக்கிள் வாங்கும் வசதி இருந்தால் நடந்து போகணும்; பொது போக்குவரத்தை பயன்படுத்தணும் என்கிற ஒரே ஒரு தீவிரமான கட்டுப்பாடு மட்டுமே உண்மையில் நமக்கு நிம்மதியையும், சுதந்திரத்தையும் கொடுக்கும்

போலி கௌரவம் மற்றும் சொகுசு வாழ்க்கைக்கும், உணர்ச்சிகளுக்கும் அடிமையானவர்கள் என்ன வேண்டுமானாலும் செய்யட்டும்; வாங்கட்டும்; அவர்களைப் பற்றி படிப்பதையோ, அவர்கள் வீடியோக்களை பார்ப்பதையோ தவிர்ப்போம்

இந்த  எண்ணமும், கட்டுப்பாடும்தான் ஒவ்வொரு மனிதனின் நிரந்தரமான நிம்மதியான, மன உளைச்சல் இல்லாத வாழ்க்கைக்கு 100 சதவீதம் உத்தரவாதம் அளிக்கும். இதுதான் நிஜ கோடீஸ்வர வாழ்க்கை

பரிதாபமான மீடியாக்கள்

பெரும்பாலான ஊடகங்களுக்கென்று நடுநிலைத்தன்மையோ, நேர்மையோ, நேர்மறை சிந்தனையோ, சமூக அக்கறையோ, பொறுப்புணர்ச்சியோ எதுவும் கிடையாது. உண்மையை பெரும்பாலான ஊடகங்கள் சொல்லாது. ஏனென்றால், இங்கு பல ஊடகங்களும், நிபுணர்களும் ஒன்று பணம் சம்பாதிக்க, கட்சியை வளர்க்க, அல்லது இல்லாத ஒன்றிற்கான தேவையை செயற்கையாக உருவாக்கவே செயல்படுகிறார்கள்.  

ஒரு செய்தியை நேரில் சென்று, அலசி ஆராய்ந்து நடுநிலையாக எழுத நேரம் ஆகும். TRENDING VIDEO, TALK SHOW, REALITY SHOW, LIVE DEBATE, BREAKING NEWS, FLASH NEWS என்ற வகையில் ஏதாவது ஒன்றை அடிக்கடி கூவிக்கொண்டே இருந்தால்தான் மக்கள் அவர்கள்  சேனலை பார்ப்பார்கள் அல்லது பத்திரிக்கையை படிப்பார்கள் என்று அவர்களே திடமாக தவறாக நம்புகிறார்கள்

சாதாரண செய்தி மற்றும் நிகழ்ச்சியைக்கூட பொழுதுபோக்கு, சுவாரஸ்யம், முதல்முறையாக, லைவ், பரபரப்பு, வேதனை, பயங்கரம், போர், வியாதி, போராட்டம்  போன்ற (கவர்ச்சி) வார்த்தைகளை வைத்து மிக அவசியமான செய்தி போல செயற்கையாக சித்தரித்து மக்களை பார்க்க வைப்பது;

ஆபாசம், உணர்ச்சி, வன்முறை, பயம், வேதனை, பதற்றம், கோபம், வெறுப்பு போன்ற எதிர்மறையான உணர்ச்சிகளை மக்களிடையே விதைக்கும் வகையிலான போஸ்டர், டிரெயிலர், விளம்பரம், வீடியோக்களை மக்களின் முகத்தில் எறிவதே அவர்கள் தொழில் யுக்தி. (உணர்ச்சிகளை சுரண்டி நடத்தும் பிழைப்பு)  

இவற்றை எல்லாம் உடனே பார்க்காமல், Comment, like, share செய்யாமல், குறிப்பாக SUBSCRIBE செய்யாமல் தள்ளி இருப்பவர்களே நிஜ புத்திசாலிகள், செல்வந்தர்கள், நிம்மதியானவர்கள். புரிந்து நடப்பவர்கள் புனிதர்கள். நன்றி மக்களே! 

எனது யூடியூப் வீடியோக்களை காண